வெண் துணிக்கை சிறு மணல் மேல்
வேடிக்கை காட்டும் அலைகள்
அள்ளிச் செல்லும் தடங்களிலும்
அழிய மறுக்கிறது நினைவுகள்
வேலியோரம் பூத்த செவ்வரத்தை
கிள்ளிச் செல்ல நீண்ட கரங்களில்
காயம் செய்த ரோஜா முற்களில்
காய்ந்தும் காய மறுக்கிறது குருதி
செம்மணற் சாலை மேல்
சென்ற பேரூந்து பயணம்
தொலைவாக சென்றும்
கலைய மறுக்கிறது புழுதி
மூடிய விழிகளுள் உருளும் கனவுகள்
நீளமானதாய் இருந்தும் நிஜத்தில்
சுருங்கிக் கொள்ளும் விநாடிக்குள்
அடங்க மறுக்கிறது வாழ்க்கை
நிகழ்காலம் எதிர்காலம் எல்லாம்
இறந்தகால ரேகைகள் இங்கே
பழக்க தோசம் மனது
பழையதை மறக்க மறுக்கிறது
No comments:
Post a Comment